உன்னை விடமாட்டேன் – பகுதி 44

ரிஷி தன்னைக் கடத்தி வந்து நான்காவது நாளாகிவிட்டது என கணித்தாள் தேனரசி. உண்மையில், அவளுக்கு இரவு, பகல் தெரியவே இல்லை. அவளை ரிஷி குளிக்க, சாப்பிட, உறங்க உத்தரவிட்டு அதைச் செயல்படுத்துவதன் மூலம் அதைக் கணித்தாள். ‘இனி இப்படியே இருக்க முடியாது. நாளை காலை அவன் வரும்போது ஏதாவது பேசி அவன் என்ன நினைக்கிறான் என அறிந்துகொள்வது அவசியம்‘ என எண்ணினாள். அவளுக்கு ரிஷியிடம் பேசவே விருப்பம் இல்லை. ‘ஆனால், என்ன செய்வது? பேசினால்தான் தப்பிக்க அல்லது தற்கொலை செய்துகொள்ள வழி கிடைக்கும். இப்பொழுது பேச வேண்டிய கட்டாயம்’ .என்று எண்ணியடி அன்று இரவு உறங்கிவிட்டாள்.

அன்றைய இரவு, ‘ஒரு வாரத்தில் வீட்டிற்கு வருவதாய் கூறியுள்ளோம். ஒரு வாரத்திற்குப் பிறகு, காலையிலேயே சமைத்து அவளருகில் வைத்து விட்டு 7 மணிக்கெல்லாம் கிளம்பி மதியம் 2 மணியளவில் அல்லது அதற்கு முன்னதாக இங்கு வரும்படி பார்த்துக்கொள்ள வேண்டியதுதான். இவளைக் கஷ்டப்பட்டு கடத்திக் கொண்டு வந்த விட்டு நிச்சயமாக வீண் தலைவலியில் மாட்டிக் கொண்டேன். அன்றாட அலுவலை எப்படி பார்ப்பது? இவளை கவனிக்க ஆள் வைக்க வேண்டிவருமோ?

தாத்தா சொன்னதைக் கேட்டிருக்கலாம். முட்டாளைத் திருத்துகிறேன் என்று வம்பில் தான் மாட்டிக்கொண்டேன். என்ன பெண் இவள்? இவளோ வாயையே திறக்க மாட்டேன் என்கிறாள். எத்தனை நாட்களானாலும் இப்படியே அழுது கொண்டு அமைதியாக இருந்து விடுவாளோ?‘ என்று ரிஷியும் பயந்தான்.

உண்மையில் ரிஷி இப்படி ஆகும் என நினைக்கவில்லை. பாதுகாவலுக்கு தாத்தா, பெரியப்பா, அப்பா, மலையரசன் என சுற்றி சூழ சொந்தம் இருக்கும் திமிரில் ஏடாகூடமாய் நடந்துகொண்டவளுக்கு தக்க பாடம் கற்றுக்கொடுக்க வேண்டியே கடத்தி வந்தான். மீண்டும் அவளின் நினைவில் மூழ்கினான்.

‘தனியே மாட்டிக்கொண்டோம் என்ற பயத்தில் காரிலேயே சரணாகதி அடைந்திருந்தால் அப்படியே காரைத் திருப்பி ஓட்டி இருக்கலாம். இவளோ அதிக திமிர் பிடித்தவளாய் இருக்கிறாள் என்று சென்னைக்கே வந்தாயிற்று. முகத்திலே எச்சிலை உமிழும் அளவுக்குத் திமிர். கற்பை இழந்தாலும் அழவில்லை. என்னைத் தாக்கத்தானே முயன்றாள். தற்போது திமிர் அடங்கினாலும் தலைக்கனம் அவளுக்கு போகவில்லை. என்ன ஒரு பிடிவாதம். அழுகிறாள். .அதுவும் ரகசியமாய். தன்னிடம் கெஞ்சவும் இல்லை. பயப்படவும் இல்லை.

எப்படி இருந்தாலும் என்னால் தண்டனை கொடுக்க முடியும். என அவளுக்கு புரிய வைத்து, அவளை தன் தவறுக்கு மனதார மன்னிப்பைக் கேட்க வைக்க வேண்டும் என்று நினைத்தால் அவள் என்னை ஏன்தான் கடத்திவந்தோம் என நினைக்கும்படி செய்துவிட்டாளே! சரியான சாகசக்காரிதான். மலையரசனுக்கு இப்படி ஒரு தங்கையா? சை!’ ரிஷியின் மன ஓட்டத்தின் கடைசியில் ‘தான் தோற்று விட்டோமோ? அவள் ஜெயித்து விட்டாளோ?’ என்ற எண்ணம் தோன்றியது.

‘இல்லை, இல்லை. உன்னை விட மாட்டேன். நான் தான் ஜெயிப்பேன். ரிஷி ஜெயிப்பதற்கென்றே பிறந்தவன். எத்தனை நாட்கள் என்ன? மாதங்கள் என்ன? வருடங்களானாலும் என்னிடம் பணம் இருக்கிறது. நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். பார்க்கலாம் நீயா? நானா? என்று.’ என எண்ணியவாறு அவனும் உறங்கினான்.

காலையில் எழுந்த ரிஷி வழக்கம் போல் காலைக் கடன்களை தானும் முடித்து, பிறகு அவளையும் முடிக்க வைத்து விட்டு, காலை சமையலை முடித்தான். பின் காலை உணவுடன் தேனரசியிடம் சென்றான். காலை உணவுடன் உள்ளே வரும் ரிஷியைக் கண்ட தேனரசி ‘இனி ரிஷி நடுவில் ஒரு காபியும் பிறகு மதிய உணவும் கொண்டுவருவான். பிறகு வழக்கம்போல் சென்றுவிடுவான். பிறகு திரும்பவும் நொறுக்கத் தீனி, காபி அப்புறம் இரவு உணவு. அவ்வளவுதான். இம்முறை அவனை விடக்கூடாது. பேசியே போக விடாமல் செய்ய வேண்டும்.’ என முடிவுக்கட்டி வாயைத் திறந்தாள்.


Comments

Popular posts from this blog

உன்னை விடமாட்டேன் – பகுதி 27

உன்னை விடமாட்டேன் – பகுதி 22

உன்னை விடமாட்டேன் – பகுதி 31